இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Sunday, June 6, 2021

 


'இலக்கியத்தில் சமூகப் பிரதிபலிப்புகள்: சமூகவியல் கோட்பாடுகளின் வழியான திறனாய்தல்" எனும் நூல் யாழ்ப்பாணம், திருநெல்வேலி தூண்டி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 2020இல் வெளிவந்தது. 134 பக்கங்களைக்கொண்ட இந்த நூல் 9 விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது. தூண்டி தி.செல்வமனோகரன் அவர்களின் பதிப்புரையில் 'இக்கட்டுரைகள் யாவும் சமூகம், இலக்கியம் எனும் இரு அம்சங்களும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் சமாந்தரமான இயங்கியல் நிலையில் திகழ்வதை தெளிவுபடுத்துகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இலக்கியத்தை விளங்கிக்கொண்டு, சமூகத்திலுள்ள பிரச்சினைகளை இலக்கியம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. ஆய்வரங்குகளில் படிக்கப்பட்ட கட்டுரைகளும், சிறப்பு ஏடுகளில் வெளியான கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.



 'நயம்பட: படைப்பு-படைப்பாளி-படிப்பு" எனும் நூல் அவ்வப்போது இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்த படைப்புகள், படைப்பாளிகள் பற்றிய திறனாய்வு நோக்கிலானதும், நயப்பு நோக்கிலானதுமான கட்டுரைகள் அடங்கிய நூல். படைப்புக்கும் படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் இடையிலான உறவுநிலையின் வீச்செல்லைகளை புரிந்துகொள்ள முனைந்த கட்டுரைகள் இவை. சில கட்டுரைகள் படைப்பாளிகளின் நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளும் அணிந்துரைகளுமாகும். 2020இல் ஜீவநதியின் 160ஆவது வெளியீடாக வந்த 15 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூல், சி.ரமேஸ் அவர்களின் விரிவான பிற்குறிப்புடன் வெளிவந்துள்ளது. 




'இலக்கியத்தில் சமூகம்: பார்வைகளும் பதிவுகளும்" எனும் நூல் இலக்கியத்தின் சமூகவியலை பேசுகின்றது. சமூகவியல் கொள்கைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் பிரதிகளையும், இலக்கியப் படைப்பாளிகளின் கருத்துநிலைகளையும் பகுப்பாய்வு செய்கிறது. ஜீவநதியின் 34ஆவது வெளியீடாக 2014இல் வெளிவந்த இந்த நூல் அந்த ஆண்டுக்கான சிறந்த திறனாய்வு நூலுக்கான வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பரிசை பெற்றது. 120 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில் 10 கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. மரபு மற்றும் நவீன இலக்கியங்களை சமூகவியல் புலமைப் பின்புலத்துடன் புரிந்துகொள்ள முனைந்துள்ள கட்டுரைகளாக அவை அமைந்துள்ளன. 



'கிராமியம்-கல்வி-மேம்பாடு: சமூகவியல் பார்வைகள்" எனும் நூல் சமூகவியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பாகும். சாத்வீக சுருதி வெளியீடாக டிசம்பர் 2013இல் பிரசுரமானது. உள்ளடங்கியுள்ள பத்துக் கட்டுரைகளில் கல்வியின் சமூகவியல் நோக்கிலான கட்டுரைகளும், கிராமிய சமூகவியல் தொடர்பான கட்டுரைகளும், அபிவிருத்தி மற்றும் உலகமயமாக்கம், இளையோர் சமூகவியல் சார்ந்த கட்டுரைகளும் உள்ளன. அல்-புனைவாக்க வகையைச் சேர்ந்த நூலான இது ஓரளவுக்கு சமூகவியல் புலமைநெறிப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது. 

 


'இரகசியமாய்க் கொல்லும் இருள்" எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஏப்ரல் 2015இல் சாத்வீக சுருதி வெளியீடாக பிரசுரமானது. 95 பக்கங்களில் நோக்கம் கருதித் தெரிவுசெய்யப்பட்ட 9 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. 'அநீதியான மேலாண்மைக்குள் உயிரழியும் பிஞ்சு மனங்களின் குரலாக, இத்தொகுப்பின் சிறுகதைகள் யாவும் சமூகத்தின் ஆத்மாவை உலுக்கி நிற்கின்றன" என்று இக்கதைகள் பற்றி வாழ்த்துரையில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் குறிப்பிடுகின்றார். திருமதி கோகிலா மகேந்திரன் அணிந்துரையில், தொகுப்பில் அடங்கிய கதைகளின் உளவியல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றார். வடக்குமாகாண பண்பாட்டு அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு பெற்றது. 

Saturday, June 5, 2021



 'தொலையும் பொக்கிசங்கள்" எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூல். எழுத்தாளர் ஆ.இரத்தினவேலோன் அவர்களின் மீரா வெளியீட்டகத்தினால்(கொழும்பு), அதன் 79ஆவது பிரசுரமாக ஏப்ரல் 2009இல் வெளியிடப்பட்டது. 89 பக்கங்களைக் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்புநூலில் பத்து சிறுகதைகள் உள்ளன. முன்னுரையை ஞானம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் எழுதியுள்ளார். போர்க்கால வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. கதைகள் போரினாலும் கல்வித்துறையின் மேலாண்மைகளாலும் பாதிக்கப்படும் சிறுவர்கள் பற்றி கரிசனை எடுக்கிறது. பெண் ஆண் உறவில் வரும் அகச் சிக்கல்களை பேசுகிறது. இனமுரண்பாட்டுச் சூழலில் இனங்களுக்கிடையிலான பழைய தொடர்புகளை மீட்டுப்பார்க்கிறது. இந்தத் தொகுப்பில் அடங்கும் சிறுகதைகள் பல போட்டிகளில் பரிசு பெற்றவை. இதிலுள்ள 'தொலையும் பொக்கிசங்கள்" என்ற சிறுகதை பத்தாம் வகுப்புக்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில், சிறுகதை ஒன்றைக் கற்பிப்பதற்கான மாதிரிக் கதையாக 2007இல் சேர்க்கப்பட்டிருந்தது.   



'முதுசொமாக" எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. யாழ்ப்பாணம் தூண்டி வெளியீட்டகத்தினால் ஜுன் 2002இல் வெளியிடப்பட்டது. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இந்தச் சிறுகதைத் தொகுப்புநூல் 84 பக்கங்களில் கதைகளையும், பதினேழு பக்கங்களில் முன்னுரை, அணிந்துரை, நயப்புரைகளையும் கொண்டது. எனது முதலாவது நூலுக்கான பின் அட்டையிலான அறிமுகக் குறிப்பை எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் எழுதியுள்ளார். அறிமுகவுரையை எழுத்தாளர் தெணியான் அவர்களும் நயப்புரையை எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களும் எழுதி என் முயற்சிக்கு ஊக்கம் தந்திருந்தனர். வாழ்த்துரையை எனது பல்கலைக்கழக கல்விக் காலத்துப் பேராசிரியரான என்.சண்முகலிங்கன் வழங்கியிருந்தார். நண்பர் தூண்டி செல்வமனோகரனின் பெரும் முயற்சியால் வெளியான இந்தச் சிறுகதை நூலுக்கான வெளியீடு, நான் ஆரம்பநெறி முதல் கல்வி கற்ற பாடசாலையான தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சண்முகலிங்கன், எழுத்தாளர்களான செங்கை ஆழியான், தெணியான், காலாமணி முதலானோர் உரைகளாற்றி என்னை ஊக்கப்படுத்தினர். எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தந்தனர். முதற்பிரதியை எழுத்தாளரும், விமர்சகருமான ஆ.கந்தையா அவர்கள் பெற்று என்னை கௌரவித்தார். இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் முதுமையின் தனிமைத் துயர்கள், சமூகத்தின் போலி கௌரவங்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் மன அவசங்கள், போர்க்காலத்து வாழ்வின் சிக்கல்களும் சிதைவுகளும், பெண்கள் மீதான வெளித்தெரியா வன்முறைகள், உண்ணாட்டு இடப்பெயர்வுகளின் அவலங்கள் என்பவற்றை பேசுகின்றன.